
இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் ஆயிரம் வகை மாம்பழங்கள் காய்க்கின்றன. தமிழ்நாட்டு சந்தைகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா, பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம் என்று பட்டியல் நீளமாக போய் கொண்டே இருக்கும்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப் பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்துக்கு ரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு.
இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டமாக இருக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
நல்ல கனிந்த மாம்பழங்களைச் சாப்பிட்டால் மாதவிலக்கு ஒழுங்குபடும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது. மாம்பழம் பல் நோய்களையும் போக்கும்.
பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்துத் துப்பிவிட்டால் பல்நோய் நீங்கிவிடும். சிறு நீர்ப் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்துக்கு உண்டு.
இரவில் மாம்பழம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா? பயப்படாதீங்க, தாராளமாக சாப்பிடலாம்.
தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவற்றை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இன்னொரு விஷயமும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
அதாவது, மாம்பழத்தில் உள்ள சில வேதிப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்துக்கு புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதில் நல்ல முடிவுகள் ஆனால் சர்க்கரை நோயாளிகள், ஆய்வுகளே சொல்லிவிட்டன, இனியென்ன என்று இஷ்டம் போல மாம்பழத்தை 'வெட்டாதீர்கள்'. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
அதை மனதில் வைத்து, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாகச் சாப்பிடுங்கள். உங்கள் நாவும் இனிக்கும், உடல்நலமும் சிறக்கும்!
0 comments:
Post a Comment